Thursday, February 16, 2023

 Bhakti Theological Songs 1436 to 1440


1436 கொண்டாடணும்

 

நாயைக் குளிப்பாட்டி

நடுவீட்டில் வைத்தாலும்

வாலைக் குழைத்து

மலம்தின்னப் போகும்

 

அதுபோல நீவந்து

என்னுள்ளம் அமர்ந்தாலும்

என்மனம் தன்போல

மலந்தின்னப் போகும்

 

அன்றாட வாழ்விலே

கொண்டாடிப் போற்றவே

ஆயிரம் நன்மைகள்

நீசெய்த போதிலும்

 

இயற்கையாய்த் தன்போல

வந்திடும் இடையூறு

தன்னையே எண்ணியே

என்மனம் வாடும்

 

துன்பமே அறியாத

வாழ்வுமேத் தந்தாலே

நிச்சயம் என்மனம்

சோர்ந்துமேப் போகும்

 

துன்பமே வாழ்வென

ஆயிடும் போது

என்னுளம் நிச்சயம்

உன்னையும் மறந்திடும்

 

இன்பம் துன்பம்

கலந்ததே வாழ்வென்ற

தாரக மந்திரம்

தன்னையும் நினைந்து

 

இன்பத்தைக் கொண்டாடி

துன்பத்தை எதிர்கொண்டு

நடுநிலையாய் நின்று

வாழ்வையும் வாழணும்

 

இருவரை வாழ்ந்தோர்கள்

இதுபோல வாழ்ந்தார்கள்

இனிமேலும் வாழ்வோர்கள்

இதுபோல வாழ்வார்கள்

 

என்பதை உணர்ந்து

உன்னருள் நினைந்து

இந்நாளும் வாழவே

நீயுமே உதவணும்

 

குருகுலம், 9-10-2022, காலை 5.30

 

1437 வரம் வேண்டும்

 

கேட்கச் சொன்னதால்

கேட்கிறேன் நானும்

கையேந்தி வந்து

நிற்கிறேன் நாளும்

 

ஆயினும் கேட்டது

கிடைத்திட வில்லை

கேட்காமல் இருக்க

முடியவும் இல்லை

 

அன்றாடம் என்னுள்

வந்திடும் ஒருவித

சஞ்சலம் தன்னைப்

போக்கிட வேண்டும்

 

வாராத ஒன்றை

வந்திடும் என்று

வீணான கற்பனை

செய்துமேக் கொண்டு

 

அதற்கான தீர்வு

பலவுமே எண்ணி

அவற்றிலே ஒன்றும்

பயனுமே தாராது

 

இப்போது உள்ள

நிலையம் தொடர

எப்போதும் போல

நீயும் உதவிட

 

கையேந்தி வந்தேன்

உன்முன் நானும்

இக்குறை தன்னையும்

நீதான் போக்கணும்

 

பயந்த காரியம்

நேரிட்டா தென்று

துணிந்து நானும்

தைரியம் கொண்டு

 

ஏதான போதிலும்

நீயுள்ளாய் என்பதை

எண்ணியே என்மனம்

போற்றியே வாழணும்

 

இதையே வரமாக

கேட்கிறேன் இப்போது

வழக்கம்போல் நீயும்

தந்து காத்திடு

 

குருகுலம், 9-10-2022, இரவு 11.30

 

1438 ஓய்வும் எடுத்திடு

 

இனியென்ன காரியம்

உனக்குமே இருக்கு

அதைமட்டும் கூறிடு

முதலிலே எனக்கு

 

படைத்தாய் காத்தாய்

மரித்துமே மீட்டாய்

பரமேறிச் சென்று

அமர்ந்துமே கொண்டாய்

 

மீண்டும் வரும்வரை

ஓய்வுதான் உனக்கு

வேறென்ன வேலை

இருக்குது உனக்கு

 

ஆனால் என்னிலை

எண்ணியேப் பாரு

ஒய்வு ஒழிச்சல்

உள்ளதா சொல்லு

 

கருவினில் உருவாகி

கல்லறை போகும்வரை

எத்தனை வேலைகள்

உள்ளது எமக்கு

 

அதுபற்றி அக்கறை

உனக்குமே இல்லை

ஆகவே தலையீடு

நீசெய்வ தில்லை

 

என்னால் முடிந்ததை

நானுமே செய்து

இனியெம் பாடென

கைநீ விட்டாய்

 

வேண்டுதல் செய்து

எதையேனும் கேட்டால்

தருகின்ற நேரம்

வரவில்லை என்றாய்

 

அதற்கான காரணம்

நாங்களும் கேட்டால்

என்சித்தம் அதுவெனப்

பதில் கூறுகின்றாய்

 

ஆகவே ஒருபுறம்

போராட வேண்டும்

மறுபுறம் ஓயாமல்

புலம்பிட வேண்டும்

 

ஏதுமே காதிலே

வீழாது போல

நீமட்டும் ஓய்வு

நன்றாக எடுக்கணும்

 

இருக்கட்டும் எதுவரை

போகும் பார்க்கிறேன்

என்றேனும் ஒருநாள்

உன்னிடம் வருவேன்

 

அப்போ காட்சியும்

அடியோடு மாறிடும்

உனது ஓய்வுக்கு

முடிவும் வந்திடும்

 

நிரந்தர ஒய்வு

நாங்களும் எடுக்க

ஓயாமல் ஓழியாமல்

எம்மை காக்கணும்

 

ஆகவே இப்போது

ஓய்வும் எடுத்திடு

அதன்பின் முற்றாக

அதையும் மறந்திடு

 

குருகுலம், 9-10-2022, மலை, 5,15

 

1439 உன் கை நோகும்

 

என்னிடம் கேள்வி

கேட்பதை விட்டு

எனக்கு பதில்தர

முடியுமா பாரு

 

அடிவாங்கி அடிவாங்கி

அழுது ஓய்ந்தேன்

ஆயினும் அடிப்பதை

நீயுமே நிறுத்தலை

 

ஒன்று குறைய

நாற்பது அடியென

உன்வேதம் தெளிவாக

சொன்ன போதிலும்

 

எண்ணுவதைக் கூட

நீயுமே நிறுத்தி

அடிப்பதை மட்டும்

ஏன் தொடர்ந்தாயோ

 

எத்தனை அடித்தாலும்

தாங்குறான் என்று

என்றுமே நீயும்

 எண்ணி விட்டாயோ

 

அடிவாங்கி அடிவாங்கி

மறத்துமேப் போனதால்

எத்தனை அடித்தாலும்

இன்னமும் தங்குறேன்

 

ஊரார் அடித்தல்

உன்னிடம் வரலாம்

நீயுமே அடித்தால்

எங்கு செல்லலாம்

 

தாயன்றி சேய்க்கு

இறுதிப் புகலுண்டோ

நீயன்றி புகலிடம்

எனக்கு வேறுண்டோ

 

ஆகவே எப்படி

நீயுமே அடித்தாலும்

உன்னிடம் மட்டுமே

மீண்டுமே வருவேன்

 

அடித்தபின் உங்கை

நோகுமே என்பதால்

அதைமட்டும் எண்ணி

நானுமே அழுவேன்

 

ஆயினும் அதையே

நீயும் விரும்பினால்

அடிவாங்க உன்னிடம்

 

அடிக்கடி வருவேன்

 

குருகுலம், 10-10-2022, இரவு, 11.00 pm

I felt that the Lord is punishing me too much beyond my capacity. I became tired of so many things—both in body and mind.  Then when I was praying to the Lord again I pour down my heart by writing this songs.

1440 நல்லதே நடக்கும்

 

எந்த முடிவு

நீ எடுத்தாலும்

நல்லதாய் இருக்கும்

நானதை அறிவேன்

 

அப்படி எனது

முடிவு இருக்குமா

என்பதை நிச்சயம்

நானும் அறியேன்

 

ஆயினும் எனக்கு

உள்ள உரிமையில்

தலையிட மாட்டாய்

நானதை அறிவேன்

 

ஆனால் அதிலுள்ள

ஆபத்தை உணர்ந்து

அடிமை நானும்

தயக்கம் கொண்டேன்

 

துணைக்கு நீயும்

இருப்பதினாலே

துணிந்து எடுக்கவா

என்பதைச் சொல்லு

 

அதன்பின் வந்திடும்

ஆபத்து அனைத்திலும்

உனக்கும் பொறுப்பு

உள்ளதை எண்ணு

 

எனக்கேன் வம்பு

என்றுமே எண்ணி

ஒதுங்கிட உன்னால்

முடியுமா சொல்லு

 

இருவரும் ஒன்றாய்

இணைந்த பின்னாலே

எது நடந்தாலும்

உனக்குண்டு பங்கு

 

ஆகவே நீயே

முடிவை எடுத்து

அதன்பின் தகவலை

மட்டும் தந்திடு

 

எதுவாய் இருந்தாலும்

நானும் ஏற்பேன்

இதுவரை நானும்

அதைத்தான் செய்தேன்

 

இதுவும் உனக்கு

நன்கு தெரியும்

ஆகவே தயக்கம்

இனியேன் உனக்கும்

 

தயக்கம் ஏதும்

இருந்தால் சொல்லு

துணைக்கு இருக்கேன்

தைரியம் கொள்ளு

 

எனக்கு நீயும்

உனக்கு நானும்

தைரியம் கொடுக்க

இருந்திடும் போது

 

துணிந்து முடிவை

நீயும் எடுத்திடு

நல்லதே நடக்கும்

என்பதை அறிந்திடு

 

குருகுலம், 16-10-2022, இரவு, 10.30

Since past few days I was in a dilemma about taking one important decision.  Others try to guide me their best.  But at the end I have to take the call. So this night when I was unable to take one final decision, I was talking about it to the Lord and the result is this song as my prayer [and also teasing the Lord].

No comments: